திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் போலி தங்க காணிக்கைகள்
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத் தாலி, தங்க மூக்குத்தி, தங்க வேல், வெள்ளிப் பாதங்கள் போன்றவை போலியானவை என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலியான நகைகளை விற்ற கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நேர்ந்து கொள்பவர்கள், அங்குள்ள உண்டியலில் தங்கத் தாலி, வேல், மூக்குத்தி, வெள்ளிப் பாதம் உள்ளிட்டவற்றை காணிக்கையாகப் போடுவது வழக்கம்.
இவற்றை பெரும்பாலும் கோவிலுக்கு அருகில் உள்ள நகைக் கடைகளில் வாங்கி கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவார்கள்.
நேற்று கோவில் உண்டியலில் சேர்ந்த காணிக்கைப் பொருட்கள் எடுத்து எண்ணப்பட்டன. அப்போது அதில் போடப்பட்டிருந்த தங்கத் தாலி, வேல், மூக்குத்தி, வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவை போலியானவை, கவரிங் என்று தெரிய வந்தது.
கோவிலுக்கு அருகில் நகைக் கடை வைத்திருப்போர், அப்பாவி பக்தர்களை தங்கம், வெள்ளி என்று கூறி போலியான நகைகளை தலையில் கட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் நகைக் கடை அதிபர்கள் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸாரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி நகைகளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.