எச்1பி விசா பெற குவிந்த விண்ணப்பங்கள் - குலுக்கல் முறையில் தேர்வு!
வாஷிங்டன்: எச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள் இலக்கையும் தாண்டி அதிக அளவில் வந்துள்ளதால், கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் விசாக்களை வழங்க அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
2009ம் ஆண்டுக்கான எச்1பி விசாக்களை விநியோகிக்கும் பணியை அமெரிக்க குடியுரிமைப் பிரிவு தொடங்கியுள்ளது. 2009ம் ஆண்டுக்கு பொதுப் பிரிவில் 65 ஆயிரம் விசாக்களையும், அமெரிக்காவில் உயர் படிப்பை முடித்த வெளிநாட்டினருக்கு 20 ஆயிரம் விசாக்களையும் வழங்க அமெரிக்க குடியுரிமைப் பிரிவு தீர்மானித்துள்ளது.
விண்ணப்பங்களை அளிப்பதற்கான கடைசி நாள் திங்கள்கிழமையுடன் முடிவடைந்துள்ளது. ஒதுக்கீட்டு அளவைத் தாண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது 1 லட்சத்து 23 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளனவாம். அதுவும் இரண்டே நாட்களில் இத்தனை விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இதனால் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் விசாக்களுக்குரியவர்களைத் தேர்வு செய்ய அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் இந்த குலுக்கல் நடைபெறவுள்ளது.
இந்தக் குலுக்கலில், அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பட்ட மேல் படிப்பு முடித்தவர்களுக்கு இந்த குலுக்கலில் இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும். முதலில் 20 ஆயிரம் பேருக்கான குலுக்கல் நடைபெறும். அதில் விசா கிடைக்காதவர்களின் பெயர்கள், 65 ஆயிரம் பேருடன் சேர்த்து குலுக்கலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
கடந்த பல ஆண்டுகளாக இந்த எச்1பி விசா இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு பெரும் வரப் பிரசாதமாக இருந்து வருகிறது. இந்த விசாவைப் பயன்படுத்தித்தான் இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்கள் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் அமெரிக்க செனட் உறுப்பினர்களான டிக் டர்பின், சக் கிராஸ்லி ஆகியோர் இந்த விசா முறைக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு சாப்ட்வேர் நிறுவனங்கள் இந்த விசாவை தவறாகப் பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக இன்போசிஸ், விப்ரோ, எம்பசிஸ் உள்ளிட்ட 9 இந்திய நிறுவனங்கள் உள்பட 25 சர்வதேச சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு இவர்கள் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஆனால் எச்1பி விசாவை அதிக அளவில் தர வேண்டும் என்று அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனங்கள் அந்த நாட்டு நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகின்றன.
அதிக அளவிலான வெளிநாட்டு சாப்ட்வேர் நிபுணர்களை குறிப்பாக இந்தியர்களை அமெரிக்காவில் பணியமர்த்த வகை செய்யும் வகையில் குடியுரிமை சட்ட விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பில் கேட்ஸ் கோரியுள்ளார்.
அமெரிக்கர்களை மட்டும் வைத்துக் கொண்டு தகுதியானவர்களை பணியில் அமர்த்துவது மிகுந்த சிரமத்திற்குரியதாக இருப்பதாக தேசிய அமெரிக்க கொள்கைக் கழகமும் தெரிவித்துள்ளது. எனவேதான் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டினரின் சேவையை எதிர்பார்த்து வெளியில் ஓடுவதாகவும் அது தெரிவித்துள்ளது.