27 சதவீத இட ஒதுக்கீடு - 1500 பேருக்கு சீட் கிடைக்கும்
மத்திய அரசுப் பணிகளில் தற்போது 27 சதவீத இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு ஏழரை சதவீதமும், உடல் ஊனமுற்றோருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில்தான் மத்திய அரசு இதுதொடர்பாக சட்டத் திருத்தத்ைத மேற்கொண்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பால் ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1500 இடங்கள் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 150 மாணவ, மாணவியருக்கு சீட் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவில் சென்னை, கான்பூர், மும்பை, டெல்லி, குவஹாத்தி, ரூர்க்கி, கோரக்பூர் ஆகிய இடங்களில் ஐஐடி நிறுவனங்கள் உள்ளன. இங்கு பிடெக் படிப்பில் மொத்தம் 4000 இடங்கள் உள்ளன. அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர்கள் இவற்றில் அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போதைய இட ஒதுக்கீட்டின் மூலம் இந்த கல்வி நிறுவனங்களில் 1080 சீட்கள் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
சென்னை ஐஐடியில் பிற்பட்டோருக்கு 150 இடம்:
இதில் சென்னை ஐஐடியில் மொத்தம் 550 சீட்கள் உள்ளன. இட ஒதுக்கீடு சட்டத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இங்கு 150 சீட்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதேபோல, பெங்களூர், அகமதாபாத், கோழிக்கோடு, கொல்கத்தா, இந்தூர், லக்னோ ஆகிய இடங்களில் ஐஐஎம் எனப்படும் இந்திய மேலாண்மைக் கழகங்கள் உள்ளன. இவற்றில் 1500 எம்.பி.ஏ இடங்கள் உள்ளன. கேட் பொது நுழைவுத் தேர்வு மூலம் இவற்றில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்தக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 405 இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது போக புதிதாக கோவை உள்ளிட்ட சில நகரங்களில் ஐஐஎம்கள் ஆரம்பிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும். இதுதவிர தற்போது உள்ள மாணவர் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு உத்தேசித்துள்ளது. அப்படி செய்யப்பட்டால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மேலும் பலன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.