புரட்சித் தலைவி யார்?: மாயாவதியா-ஜெயாவா?
சென்னை: புரட்சித் தலைவி யார் என்பது குறித்து சட்டசபையில் விடுதலைச் சிறுத்தை எம்எல்ஏவுக்கும் அதிமுக எம்எல்ஏக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சட்டசபையில் வருவாய்த் துறை, வீட்டுவசதித்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:
செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்): உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் மாயாவதி தலைமையிலான அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அம்மா மாயாவதி தான் புரட்சித் தலைவி என்றார். (அத்தோடு இன்னொரு வார்த்தையையும் சேர்த்து குறிப்பிட்டார்)
இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்களை ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
செல்வம் குறிப்பிட்ட வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றனர். இதையடுத்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுந்து அந்த வார்த்தையை நீக்குமாறு கோரினார். இதையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன் அந்த வார்த்தையை நீக்கவே, அதிமுகவினர் அமைதியாயினர்.
தொடர்ந்து பேசிய செல்வம்: உத்தரப் பிரதேசத்தில் பல துறைகளில் புரட்சிகளை மாயாவதி செய்து வருவதால்தான் அவரை புரட்சித் தலைவி என்று குறிப்பிட்டேன்.
இதற்கு பதிலளித்த அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், 2006ம் ஆண்டு தேர்தலில் 100 முறை புரட்சித் தலைவி, புரட்சித் தலைவி என்று பேசி ஓட்டுகளைப் பெற்றதை செல்வம் மறந்து விடக் கூடாது என்றார்.
முன்னதாக நடந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ பழனிச்சாமி, அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.எல்.ஏக்களுக்கு சோழிங்கநல்லூரில் காலனி அமைத்து தர வேண்டும் என்றார்.
ஆனால், இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாலபாரதி எம்எல்ஏ ஏற்கவில்லை. அவர் கூறுகையில், வீடு, காலனி கேட்பது அவர்களது தனிப்பட்ட கருத்து. அவர்களது வேண்டுகோள்.
வீடே இல்லாத மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தான் எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். முன்பு கூட ஒரு காங்கிரஸ் உறுப்பினர் காரில் பச்சை விளக்கு பொருத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார். எங்கள் கட்சி உறுப்பினர் நன்மாறன் என்னிடம் சைக்கிள் மட்டும் தான் இருக்கிறது, அதில் எந்த விளக்கை பொருத்துவது என்று கேட்டார் என்றார்.
பாலபாரதியி்ன் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.