ரூ. 2,000 கோடியில் 60,000 புதிய வீடுகள்-குடிசை மாற்று வாரியம் கட்டுகிறது
சென்னை: குடிசை மாற்று வாரியம் மூலம் 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி செலவில் 60,000 புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன.
சட்டசபையில் வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
2008-09ம் ஆண்டில் வீட்டுவசதி வாரியம் மூலம் ரூ.2,000 கோடி செலவில் 22,000 வீடுகள் கட்ட அரசு தீர்மானித்துள்ளது.
தனியாருடன் இணைந்து 24 இடங்களில் வீடுகள் கட்டப்படவுள்ளன. சென்னையில் கே.கே.நகர், தெற்காசிய விளையாட்டு கிராமம், கோயம்பேடு மற்றும் வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் முதலில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
குடிசை மாற்று வாரியம் மூலம் 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி செலவில் 60,000 வீடுகள் கட்டப்படும்.
சென்னை, மதுரை, கோவையில் குடிசை மாற்று வாரியத்தின் 9,692 பழுதடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு ரூ.263.77 கோடி செலவில் மீண்டும் புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
சென்னை, மதுரை மற்றும் கோவை நகரங்களை குடிசைப் பகுதிகளற்ற நகரங்களாக 2013ம் ஆண்டிற்குள் மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய சீரமைப்பு திட்டத்தின் கீழ் 35,270 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1208.55 கோடியில் கட்டப்படும்.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரண்டடுக்கு கீழ்தள இருசக்கர வாகன நிறுத்துமிடம் ரூ.9 கோடியில் கட்டப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.