For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெற்கு ரயில்வேயின் 460 கோடை ஸ்பெஷல் ரயில்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கோடை காலத்தில் பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே 460 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக ரயில்வே துறை இணையமைச்சர் வேலு கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தெற்கு ரயில்வேக்கு 30 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிமெண்ட், இரும்பு ஆகிய பொருட்களின் விலை உயர்வை கணக்கில் கொண்டு எவ்வாறு திட்டப் பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

இந்த ஆண்டு மொத்தம் 661 கி.மீ தூரத்திற்கு அகல ரெயில் பாதை அமைக்கப்படும். தெற்கு ரயில்வேயில் நடைபெறும் அகல பாதை பணிகளுக்கும், இரு வழிப் பாதை அமைக்கும் பணிகளுக்கும் பணம் ஒரு பிரச்சினையே இல்லை.

இருகூரில் இருந்து கோவைக்கு இருவழி பாதை அமைக்கும் பணியும், மதுரை-திண்டுக்கல்லுக்கு இடையே இரு வழிப் பாதை அமைக்கும் பணியும் இந்த ஆண்டு முடிவடையும்.

விழுப்புரம்-திண்டுக்கல் இடையே இரு வழி பாதை அமைக்கும் பணி 4 ஆண்டுகளில் முடிவடையும். திருவள்ளுர்-அரக்கோணம் இடையே நான்காவது பாதை அமைக்கும் பணி 2 ஆண்டுகளில் முடியும்.

திருவள்ளூர்-அரக்கோணம் மூன்றாவது பாதை அமைக்கும் பணி இந்த ஆண்டே முடிவடையும். செங்கல்பட்டு-விழுப்புரத்திற்கு இருவழி பாதை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பணி 3 ஆண்டுகளில் முடிவடையும்.

விழுப்புரம்-திருச்சி வரை மின்சாரமயமாக்கும் பணி இந்த ஆண்டுக்குள் முடிவடைந்துவிடும். திருச்சியில் இருந்து மதுரைக்கு மின்சாரமயமாக்கும் பணி அடுத்த ஆண்டு முடியும்.

இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இந்தியா முழுவதும் 108 ரெயில்வே பாலங்கள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் 38 பாலங்கள் தமிழ்நாட்டில் கட்டப்படும்.

கடந்த காலங்களில் ரயில்வே பாலங்கள் கட்டும்போது ரயில்வே துறையின் மேற்பார்வையில் கட்டப்பட்டன. இதில் காலதாமதம் ஏற்பட்டதால், பாலங்கள் கட்டும் பணியை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் எடுத்துச் செய்வதற்கான அனுமதியை கேட்டுள்ளோம்.

இன்னும் 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளும் அகல ரயில் பாதையாக மாற்றப்படும்.

கோடைகால சிறப்பு ரயில்கள்

கோடை காலத்தை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே மூலம் 460 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் 22 முதல் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

தேவைக்கு ஏற்ப அவ்வப்போது கோடைகால சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும்.

வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை 5 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரயில் பாதை அமைப்பதற்கான பணியில் 3.5 கி.மீ. தூரத்திற்கான பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி இன்னும் ஒன்றரை ஆண்டில் முடிவடையும்.

மீதமுள்ள ஒன்றரை கி.மீ. தூரத்தில் கட்டிடங்கள் உள்ளதால் அந்தப் பகுதிகளில் பாதை அமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்படலாம். டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பாதை அமைப்பதற்கு இடங்கள் கொடுப்பதில் பிரச்சினை இருந்தது.

அந்த இடங்களுக்கு அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலையைவிட மார்க்கெட் விலை கொடுக்கப்பட்டதால் உடனடியாக கட்டிடங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதே முறை இங்கு பின்பற்றப்படும் என்றார் வேலு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X