திருப்பூரில் ஜவுளி ஏற்றுமதியில் 10 சதவீதம் சரிவு
கோவை: திருப்பூரில் கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஜவுளி ஏற்றுமதியில் 10 சதவீத அளவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய ஜவுளி ஏற்றுமதி மையங்களில் திருப்பூரும் ஒன்று. ஜவுளி ஏற்றுமதியில் முன்னணியில் இருந்து வந்த திருப்பூர், தற்போது பெரும் சரிவை சந்திக்கத் தொடங்கியுள்ளது.
பங்குச் சந்தையில் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு, 2006-07ம் ஆண்டில் ரூ.11,000 கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி இருந்தது.
மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த 2007-08 நிதியாண்டில், இது, ரூ.9,950 கோடியாக குறைந்துவிட்டது. ஏற்றுமதியில் 10 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் செயல்பட்டு வரும் வங்கிகளில் கிடைத்த தகவல்களை கொண்டு ஏற்றுமதி அளவு கணக்கிடப்பட்டுள்ளது.
சலுகை காலத்துக்கு பிறகு, ஜவுளி ஏற்றுமதியில் ஆண்டுதோறும் 15 சதவீத வளர்ச்சி இருந்து வந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக, 10 சதவீத சரிவு இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் 25 சதவீத நஷ்டம் அடைந்துள்ளனர்.
திருப்பூரில், கடந்த காலத்தில், நான்கு லட்சம் ஊழியர்கள் பணியாற்றினர். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், கடந்த சில மாதங்களில் 7,000 முதல் 8,000 பேர் வரை வேலை இழந்தனர்.
ஜவுளி ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள், உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக, நவீன தொழில்நுட்பத்தில் ஏராளமாக செலவிட்டு வருகின்றனர் என்றார்.