27% இடஒதுக்கீடு தீர்ப்பு முழுமையாக அமல்படுத்தப்படும்: அர்ஜூன் சிங்
உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கிரீமி லேயர் எனப்படும் வசதி படைத்தோர் பிரிவை இட ஒதுக்கீட்டில் சேர்க்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் இதுதொடர்பாக பிரதமருக்கும், மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்குக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு கோராது, தீர்ப்பு அப்படியே அமல்படுத்தப்படும் என அர்ஜூன் சிங் கூறியுள்ளார். இதன் மூலம் கிரீமி லேயர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க மத்திய அரசு விரும்பவில்லை என்று தெரிய வருகிறது.
இதுகுறித்து அர்ஜூன் சிங் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தியே ஆக வேண்டும். எனவே அது அமல்படுத்தப்படும்.
கிரீமி லேயர் விவகாரம் குறித்து கவலை தெரிவித்துள்ள கட்சிகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். கிரீமி லேயர் பிரிவினருக்கும் இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து முரண்பட முடியாது.
வருகிற கல்வியாண்டிலேயே இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முயலுவோம்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் யோசனை அரசிடம் தற்போது இல்லை. அது மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய விஷயம்.
முக்கியமான விஷயம், அடிப்படை பிரச்சினை (27 சதவீத இட ஒதுக்கீடு) முடிவுக்கு வந்துள்ளது. கிரீமி லேயர் குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதை சரி செய்ய பேச்சுவார்த்தைகளை (கூட்டணிக் கட்சிகளுடன்) அரசு மேற்கொள்ளும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கமிட்டி கூட்டம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் நடைபெறும்.
அரசைப் பொறுத்தவரை, தீர்ப்பில் எவற்றையெல்லாம் அமல்படுத்த முடியுமோ அதையெல்லாம் அமல்படுத்துவோம். மற்றவை குறித்து விவாதங்கள் மூலம் சரி செய்ய முயற்சிப்போம் என்றார் அர்ஜூன் சிங்.