சர்ச்சை பயிற்சியாளர் சுட்டுக் கொலை
ஒரிஸ்ஸாச் சேர்ந்த 6 வயது சிறுவன் புதியா சிங். கடந்த 2006ம் ஆண்டு புதியா சிங், பூரியிலிருந்து புவனேஸ்வர் வரையிலான 65 கிலோமீட்டர் தூரத்தை தொடர்ந்து ஓடி கடந்து சாதனை படைத்து நாட்டையே அதிசயத்தில் ஆழ்த்தினான்.
அவனுக்குள் இருந்த திறமையை வெளிக் கொணர்ந்தவர்தான் பிராஞ்சி தாஸ். புதியாவால் அதிக தூரம் ஓடி சாதனை படைக்க முடியும் என்றும் அறிவித்தார் பிராஞ்சி. ஆனால் அதன் பின்னர்தான் சர்ச்சைகள் வெடித்தன.
பல தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள், சிறார் நல அமைப்புகள், புதியா சிங்கை வைத்து பணம் பார்க்க முயற்சிக்கிறார் பிராஞ்சி சிங், சிறுவனின் உடல் நலத்தைக் கெடுக்கும் செயல் இது என்று எதிர்ப்பு குரல் எழுப்பினர்.
இந்த நிலையில் புதியா சிங்கின் தாயாரும் தனது மகனை பிராஞ்சி தாஸ் பயிற்சி என்ற பெயரில் கொடுமைப்படுத்துவதாக புகார் கூறினார். இதையடுத்து பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார் பிராஞ்சி தாஸ்.
இந்த நிலையில் நேற்று மாலை பிராஞ்சி தாஸ் அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புவனேஸ்வரில் உள்ள பிஜேபி கல்லூரி பகுதியில் தனது நண்பர்களோடு பிராஞ்சி தாஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அங்குள்ள ஜூடோ மையத்தில் அவர் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்தனர். வந்தவுடன் பிராஞ்சி தாஸை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி விட்டனர்.
சம்பவ இடத்திலேயே பிராஞ்சி தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கழுத்து, மார்பு, கால்களில் குண்டுகள் பாய்ந்துள்ளன.
இந்த சம்பவம் ஒரிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.