தமிழ்ப் புத்தாண்டு: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர விஎச்பி முடிவு
ஸ்ரீரங்கம்: சித்திரை மாதத்தின் முதல் நாளன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்வதற்குத் தடை விதித்த தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச துணைத் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்ப்புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளன்று, கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்வதற்கு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது மத நம்பிக்கைக்கும், மக்களின் உரிமைகளுக்கும் எதிரான செயலாகும். மத வழிபாடுகள், பாரம்பரியங்களுக்கு எதிராக உத்தரவிட அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.
மாநில அரசின் இச்செயல் அரசியல் லாபம் கருதி மேற்கொள்ளப்பட்டதாகும்.
எனவே அறநிலையத்துறையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வி.எச்.பி. சார்பில் வழக்கு தொடரப்படும் என்றார் வேதாந்தம்.