ஷார்ஜாவில் இந்தியத் தொழிலாளர் மர்ம சாவு
துபாய்: ஷார்ஜாவில் பணியாற்றி வந்த இந்தியத் தொழிலாளர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஷார்ஜாவில் கடந்த பல வருடங்களாக வேலை பார்த்து வந்தவர் குமார். 40 வயதாகும் இவர், அல் குபைபா என்ற இடத்தில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று இவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவரது நெற்றியில் ரத்தக் காயம் காணப்பட்டது. நெற்றியிலிருந்து ரத்தமும் வழிந்து கொண்டிருந்தது. எனவே இது நிச்சயம் கொலையாக இருக்கும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
குமாரை அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்றனர். அதன் பின்னரே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். எனவே குடும்பத்திற்குள் ஏதாவது சண்டை ஏற்பட்டு அதில் குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
தற்போது குமாரின் உடலை போலீஸார் கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.