'அக்னி' சோதனையால் ஆமைகள் பீதி: முட்டையிட மறுப்பு!
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநில கடற்கரைப் பகுதியில், நடத்தப்பட்டு வரும் அக்னி ஏவுகணை சோதனையால், ஆமைகள் பீதியடைந்து முட்டையிட மறுத்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒரிஸ்ஸா மாநிலம் கஹிர்மாதா என்ற கடற்கரைப் பகுதி ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்குப் பெயர் போனதாகும். இப்பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் ஆமைகள் கூட்டமாக கூடி முட்டைகள் இடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஆமைகள் முட்டையிடவில்லை.
இப்பகுதியில் நடத்தப்பட்ட அக்னி ஏவுகணை சோதனையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 23ம் தேதி வீலர் தீவில் அக்னி-1 சோதனை நடந்தது. இதனால் ஏற்பட்ட பெரும் சப்தத்தால் ஆமைகள் பீதியடைந்திருக்கலாம். எனவேதான் முட்டையிட மறுப்பதாக ஒரிஸ்ஸா மாநில வன விலங்குகள் பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந் நிலையில் ஏப்ரல் 27ம் தேதி இன்னொரு அக்னி ஏவுகணை சோதனை நடத்த டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது. இதனால் வன விலங்குத் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
அடுத்த சோதனையை ஒத்திவைக்கும்படி டிஆர்டிஓவுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாக மாநில தலைமை வனவிலங்குகள் காப்பாளர் பி.கே. பட்நாயக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கஹிர்மாதா பகுதியில், பெருமளவில் ஆமைகள் கூடி முட்டையிட்டன. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 500 ஆமைகள் மட்டுமே முட்டையிட கூடியுள்ளன. ஆனால் இதுவரை முட்டை எதுவும் இடவில்லை.