கோவா விடுதியில் ரஷ்ய பயணி மர்ம சாவு
பனாஜி: இங்கிலாந்து இளம் பெண் ஸ்கார்லெட் ஈடன் கீலிங் கொல்லப்பட்ட பரபரப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டுள்ள கோவாவில் ரஷ்ய சுற்றுலாப் பயணி ஒருவர் மர்மமான முறையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் பெண் ஸ்கார்லெட் சமீபத்தில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்து தற்போதுதான் அடங்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அவர் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸில் மர்மமான முறையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் மாக்கோப்கர் நகரைச் சேர்ந்தவர் கபனோவ் விலாடிமிர் (28). இவர் கோவாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். வடக்கு கோவா கடற்கரைப் பகுதியில் உள்ள வகாடர் என்ற இடத்தில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தார்.
ஏப்ரல் 11ம் தேதிதான் இந்த கெஸ்ட் ஹவுஸுக்கு வந்தார் விலாடிமிர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விலாடிமிர் தனது அறையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இதுகுறித்து அறிந்ததும் விரைந்து வந்த அஞ்சுனா போலீஸார், விலாடிமிர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தங்கியிருந்த அறை மூடி சீல் வைக்கப்பட்டது.
நேற்று அரசு விடுமுறை என்பதால் விலாடிமிரின் உடலில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவில்லை.
மர்ம சாவு என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வேறு தகவலை அவர்கள் தெரிவிக்கவில்லை.
இதே காவல் நிலையம்தான் ஸ்கார்லெட் மரணம் குறித்தும் விசாரித்தது. அப்போது விசாரணையை சரிவர நடத்தவில்லை என்பதால் அப்போதைய சப் இன்ஸ்பெக்டர் நெர்லன் அல்பகியூர்க் டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். எனவே ரஷ்ய பயணியின் மரணம் குறித்து போலீஸார் சுதாரிப்பாக உள்ளனர்.
கோவாவுக்கு இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள்தான் அதிக அளவில் வருகின்றனர். ஆண்டுக்கு 41.91 சதவீத இங்கிலாந்துக்காரர்கள் கோவாவுக்கு வருகை தருகின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் ரஷ்யர்கள் உள்ளனர். இவர்களின் பங்கு 8.49 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.