சேது வழக்கு: ஏப் 29ல் இறுதி விசாரணை- தடை நீக்கம் இல்லை
ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது, அதை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும், சேது சமுத்திரத் திட்டத்தை வேறு பாதையில் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த வழக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் சேது சமுத்திரத் திட்டப் பணிகளை ராமர் பாலப் பகுதியில் செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்தி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி முதலில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ராமர் இருந்தார் என்பதற்கோ, ராமர் பாலத்தை அவர்தான் கட்டினார் என்பதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை எழுப்பியதால் இந்த பதில் மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
இதையடுத்து பிப்ரவரி 29ம் தேதி புதிய பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த நிைலயில் இன்று ராமர் பாலம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இருப்பினும் இடைக்காலத் தடையை நீக்கும் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் ஏப்ரல் 29ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.