புலிகள் ஊடுருவலை தடுக்க தீவிர கண்காணிப்பு
ராமேஸ்வரம்: இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மீண்டும் கடும் சண்டை நடந்து வரும் நிலையில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, மண்டபம், பாம்பன் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது கடற்படை.
போர் தீவிரமாக நடப்பதால் டீசல், ஆயுதங்கள் கடத்தலுக்காக புலிகள் தமிழகத்துக்குள் நுழையலாம் என இந்திய கடற்படை கருதுகிறது.
இதையடுத்து இந்திய கடலோர காவல்படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடற்படை ஹெலிகாப்டர்களும் இந்தக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் மன்னார் வளைகுடாவை ஒட்டிய தீவுகள் வழியாக இலங்கைக்கு வெடி பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி. ஜெகன்மோகன் சாஸ்திரி தலைமையில் ராமநாதபுரத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் தீவுப் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்திய கடற்படையினர் முயல் தீவு, நல்ல தண்ணீர் தீவு, குருசடை தீவு உள்பட 21 தீவுகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.