ரவுடியை அடித்தே கொன்ற பொதுமக்கள்
சென்னை: சென்னை அருகே ரவுடியை பொதுமக்களே திரண்டு அடித்துக் கொலை செய்தனர். அத்தனை பேரையும் கைது செய்யுங்கள் என்று போலீஸாரை அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி காவனூர் திருத்தவெளியைச் சேர்ந்தவர் சிவா (33). இவர் அப்பகுதியில் ரவுடித்தனம் செய்து வந்தார். கூடுவாஞ்சேரி, மணிமங்கலம் காவல் நிலையங்களில் இவர் மீது ஐந்து கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன
இவரை நீண்ட நாட்களாக போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் சிவாவின் ரவுடித்தனத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியுற்று வந்தனர். பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டுவது, அடிப்பது, தகராறு செய்வது என்று சிவா சுதந்திரமாக அட்டகாசம் செய்து வந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சிவா குடிபோதையில், சாலையின் நடுவே நின்று கொண்டு வருவோர், போவோரிடம் ரகளை செய்து வந்தார்.
இதையடுத்து அங்கு வந்த சிவாவின் நண்பர் கமலக் கண்ணன், சிவாவை வீட்டுக்குப் போகுமாறு கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சிவா, கமலக்கண்ணனை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார். ரத்தம் சொட்டச் சொட்ட தனது உறவினர்களிடம் விரைந்த கமலக்கண்ணன் சிவா தன்னைக் குத்தி விட்டதாக கூறினார்.
இதையடுத்து ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து சிவாவை அடிக்க முயன்றனர். ஆனால் அவர் பயப்படவில்லை. மாறாக பொதுமக்களையும் தாக்க முயன்றார். இதையடுத்து அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து சிவாவை கம்பு, தடி, கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். சிலரைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து எங்களையும் கைது செய்யுங்கள் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருகே கிராம மக்களுக்கு இடையூறு செய்து வந்த அண்ணன் தம்பியை பொதுமக்கள் சேர்ந்து விரட்டி விரட்டிக் கொலை செய்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே ரவுடி ஒருவரை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொன்றிருப்பது போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.