ஒலிம்பிக் ஜோதிக்கு நடிகைகள்-அரசியல்வாதிகள் எதற்கு?: கில்
சீனாவில் நடக்கும் ஒலிம்பிக்கையொட்டி இந்தியா வரும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பாலிவுட் நடிகைகளும் அரசியல்வாதிகளும் அதை ஏந்தி ஓட போட்டா போட்டி போட்டு வருகின்றனர்.
இந்த ஜோதி நாளை (வியாழக்கிழமை) டெல்லி வருகிறது. சீனாவுக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பாதுகாப்பு கருதி இந்தியாவில் ஒலிம்பிக் ஓட்டம் 9 கி.மீயிலிருந்து 3 கி.மீ. ஆக குறைக்கப்பட்டுவிட்டது.
மேலும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெறும் 3 கி.மீ. தூரமும் இரு பகுதிகளிலும் இரும்பு வேலி அமைக்கப்படுகிறது.
ஹெலிகாப்டர்கள் கண்காணிக்க, மிக பலத்த பாதுகாப்புடன் இந்த ஓட்டம் நடக்கிறது.
இந் நிலையில் இந்த பாரம்பரியமிக்க ஜோதி ஓட்டத்துக்கு அரசியல்வாதிகளையோ அல்லது நடிகர், நடிகைகளையோ அழைக்க வேண்டாம் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்லும் உரிமை முழுக்க, முழுக்க விளையாட்டு வீரர்களுக்குத்தான் உண்டு. வி.ஐ.பிக்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள் போன்றோருக்கு இதில் பெரிய அளவில் உரிமை இல்லை.
எனவே இந்த ஜோதியை விளையாட்டு வீரர்களே ஏந்தி செல்வார்கள். அரசியல்வாதிகள், நடிகை, நடிகர்கள் தேவையில்லை.
ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பங்கேற்க எனக்கு இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் நான், அந்த உரிமை விளையாட்டு வீரர்களுக்கு உரியது என்று கூறி மறுத்து விட்டேன். அதே சமயம் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற முறையில் ஒலிம்பிக் தொடர் ஓட்ட தொடக்க விழா அல்லது நிறைவு விழா நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்து கொள்வேன் என்றார்.
அதே போல ஒலிம்பிக்கில் இல்லாத போட்டிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களையும் இதில் பங்கேற்க தடை விதித்தால் நல்லது. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களை இதிலிருந்து ஒதுக்கி வைப்பது பிற விளையாட்டுகளை ஊக்கப்படுத்த உதவியாக இருக்கும்.
இல்லாவிட்டால் சச்சின்களும் கங்கூலிகளும் ஜோதி ஏந்திச் செல்வதைத் தான் எல்லா மீடியாக்களும் பக்கம் பக்கமாக அல்லது மணிக்கணக்கில் காட்டி பிற விளையாட்டு வீரர்களை இருட்டடிப்பு செய்வார்கள்.