அமைதியாக முடிந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்
டெல்லிக்கு இன்று அதிகாலை வந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் இன்று பிற்பகல் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து தொடங்கியது.
திபெத்தியர்களின் போராட்டம் எதிரொலியாக மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர் ஓட்டம் நடைபெற்ற குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரை பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது.
மிக பலத்த பாதுகாப்பு வளையத்திற்கு மத்தியில் பிற்பகலில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியது.
2.3 கிலோமீட்டர் தொலைவிலான இந்த ஜோதி ஓட்டத்தில் 70 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஜோதியை ஏந்திச் சென்றனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கிய ஜோதி ஓட்டத்தை முன்னாள் மல்யுத்த வீரர் சத்பால் முதல் ஆளாக ஜோதியை ஏந்திச் சென்று தொடங்கி வைத்தார்.
இந்த தொடர் ஓட்டத்தில் பி.டி.உஷா, ஷைனி வில்சன், மல்லேஸ்வரி, தன்ராஜ் பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இறுதியில் மாலை ஐந்தேகால் மணியளவில் இந்தியா கேட்டில் ஜோதி ஓட்டம் முடிவுற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விளக்கை, இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரங்கள் லியாண்டர் பயஸும், மகேஷ் பூபதியும் இணைந்து ஏற்றினர். அத்துடன் தொடர் ஓட்டம் முடிவடைந்தது.
எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இந்தியாவில் ஜோதி ஓட்டம் நடந்து முடிந்தது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்தார்.
பின்னர் இந்தியா கேட்டில் நடந்த நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், ஆளுநர் தேஜீந்தர் கண்ணா, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டி ஓட்டம்:
இந்த நிலையில் டெல்லி ராஜ்பாத்தில் உள்ள காந்தி சமாதியில் இருந்து திபெத்தியர்கள் போட்டி ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை நடத்தினர். ஜந்தர் மந்திர் வரை இந்த ஓட்டம் நடைபெற்றது.
சீன ஆக்கிரமிப்பை கண்டித்தும் திபெத்தியர்களின் உரிமைகளை பறைசாற்றும் வகையி்ல் இந்த போட்டி ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை நடத்தியதாக திபெத்தியர்கள் தெரிவித்தனர். இந்த ஓட்டத்தை முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் துவக்கிவைத்தார்.
திபெத்தியர்களுக்கு ஆதரவாக பிரபல சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான அருந்ததி ராய், சுவாமி அக்னிவேஷ் ஆகியோர் பேசினர்.