ஆலடி அருணா கொலை வழக்கு-2 பேருக்கு மரண தண்டனை
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டார். அவருடன் வாக்கிங் சென்ற நண்பரும், ஆசிரியருமான பொன்ராஜும் உடன் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், ராஜாஸ் கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜா, வேல்துரை, பென்னி என்கிற பெனடிக்ட் என்கிற அருண், ஆட்டோ பாஸ்கர், பாலமுருகன், அழகர் என்கிற வளர்ந்த அழகர், ராஜ் என்கிற ஆறுமுகம், கண்ணன் என்கிற காரகண்ணன், பரமசிவன், அர்ஜுனன், தனசிங், ரவி என்கிற டாக் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில், பென்னி, அகமதாபாத்தில் தற்கொலை செய்து கொண்டார். ஆட்டோ பாஸ்கர், சேரன்மாதேவி காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்து விட்டார். மதுரையைச் சேர்ந்த டாக் ரவி நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் அவர் போலீஸில் சரணடைந்தார்.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து நேற்று நெல்லை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நீதிபதி பாஸ்கரன் அளித்த தீர்ப்பில், பாலமுருகன், அழகர் ஆகியோர் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. வேல்துரை மீதான கொலை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. இருப்பினும் ஆயுதம் வைத்திருந்ததாக அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஏ.ராஜா உள்ளிட்ட மற்ற 6 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை. எனவே சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு சாதகமாக்கி அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட 3 பேருக்கும் வழங்கப்படும் தண்டனை குறித்த விவரம் நாளை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி பாஸ்கரன் தெரிவித்தார்.
அதன்படி இன்று 3 பேருக்கும் தண்டனை விவரத்தை நீதிபதி பாஸ்கரன் அறிவித்தார். இதில் பாலா என்கிற பாலமுருகன், அழகர் ஆகியோருக்கு மரண் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
வேல்துரைக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இன்றும் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.