நாளை மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்-'நெட்'டில் லைவ்!
மதுரை: மதுரை அரசாளும் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. தொலைக்காட்சி தவிர முதல் முறையாக இணையதளம் மூலமும் திருக்கல்யாணம் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் ஒவ்வொரு நாளும் கற்பக விருட்சம், சிம்மம், அன்னம், தங்க பல்லக்கு உள்பட பல வாகனங்களில் எழுந்தருளினர்.
நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. பின்னர் விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாக வாஜனம் பூஜை, பஞ்சகவ்ய பூஜை, கும்பபூஜை ஆகியவை நடத்தப்பட்டது.
அதன் பிறகு வைர கிரீடத்திற்கு புனித நீர் அபி ஷேகம் செய்யப்பட்டது. கோவிலிலுள்ள அனுக்ஞை விநாயகரிடமிருந்து செங்கோலும் கிரீடமும் பெறப்பட்டு, இரவு 7.22 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டப்பட்டது.
பின்னர் மீனாட்சி அம்மனுக்கு பச்சை பட்டாலான பரிவட்டமும், வேப்பம்பூ மாலையும் சாத்தப்பட்டது. அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசித்தனர்.
இதை தொடர்ந்து மீனாட்சி அம்மனிடம் ரத்தின கற்களால் பதிக்கப்பட்ட தங்கத்திலான செங்கோல் வழங்கப்பட்டது. பின்னர் பல்வேறு தீபாராதனைக்கு பிறகு அம்மனிடமிருந்து செங்கோல் பெறப்பட்டு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கரு.முத்து கண்ணணிடம் கொடுக்கப்பட்டது.
அவர் கெங்கோலுடன் அம்மன் சன்னதியில் இருந்து புறப்பட்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலமாக கொண்டு வந்தார். பின்னர் மறுபடியும் மீனாட்சி அம்மனின் திருக்கரத்தில் செங்கோல் சேர்ப்பிக்கப்பட்டது.
9-ம் நாளான இன்று திக்கு விஜயம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு வடக்கு மாசிவீதி, கிழக்கு மாசி வீதி சந்திப்பு இடத்தில் லாலாஸ்ரீ ரெங்க சத்திரம் திருக்கல்யாண மண்டபத்தில் இந்திர விமானத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி திக்கு விஜயம் செய்கிறார்.
நாளை திருக்கல்யாணம்:
சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நாளை காலை நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி, பவளக்கனிவாய்ப் பெருமாளும், காலை 6 மணிக்கு எழுந்தருளி, கோவிலுக்குள் அதிகாலை 4 மணிக்கு அழகர்சாமி நாயுடு, சூறாவளி சுப்பைய்யர், கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளாகி, நான்கு சித்திரை வீதிகள் சுற்றி வந்து, பின் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, பின்பு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவார்கள்.
அதன் பின்னர் காலை 9.30 மணி முதல் 9.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் திருக்கல்யாணம் நடைபெறும்.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவத்தை, மீனாட்சி அம்மன் கோவிலின் http://www.maduraimeenakshi.org/ என்ற இணையதளத்தில் நேரடியாக கண்டு தரிசிக்கலாம்.
திருக்கல்யாண நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மதுரைக்கு வருவதால் நாளை மதுரை விழாக்கோலம் பூண்டு காணப்படும்.
கடும் வெயில் அடித்து வருவதால், பக்தர்களின் தாகம் தீர்க்க மதுரை நகர் முழுவதும் நீர்ப் பந்தல், மோர்ப் பந்தல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு வருகின்றன.
இரவில் பூப்பல்லக்கு:
திருக்கல்யாண வைபவத்ைதத் தொடர்ந்து இரவு ஏ.சொக்கலிங்கம் பிள்ளை டிரஸ்டிலிருந்து, புஷ்ப அலங்காரம் செய்யப் பெற்ற ஆனந்தராயர் பூப்பல்லக்கில் இரவில் அம்மன் வீதி உலா நடைபெறும்.
பூப்பல்லக்கைக் காணவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவில் நான்கு மாசி வீதிகளிலும் திரண்டிருப்பார்கள்.
19ம் தேதி தேரோட்டம்:
19ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 4.08 மணி முதல் 4.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி- அம்மன் தேருக்கு வந்து எழுந்தருளுகிறார்கள். காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.
இத்தேர் நான்கு மாசிவீதி வழியாக சென்று மீண்டும் தேரடிக்கு சென்றடை யும். இதிலும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செய்வர்.
முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் 21ம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.