சித்ரா பவுர்ணமி- திருவண்ணாமலைக்கு 840 சிறப்பு பஸ்கள்
விழுப்புரம்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்னை, திருச்சி, விழுப்புரம் உள்பட பல பகுதிகளில் இருந்து 840 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து கிரிவலம் செய்வார்கள்.
வருகிற 19ம் தேதி (சனிக்கிழமை) சித்ரா பவுர்ணமி வருகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி கிரிவலம் செல்வார்கள்.
பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அன்று திருவண்ணாமலைக்கு 840 சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.
சென்னை, விழுப்புரம், திருக்கோவிலூர், பண்ருட்டி, கடலூர், புதுச்சேரி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், காஞ்சீபுரம், தாம்பரம், அடையாறு உள்பட பல பகுதிகளில் இருந்து இந்த பஸ்கள் 19ம் தேதி இரவு இயக்கப்படும்.
சென்னை- திருவண்ணாமலை வழித்தடத்தில் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.