ஜாலிக்காக 21 பேரைக் கொன்ற 3 பேர் கைது
மாஸ்கோ: உக்ரைனைச் சேர்ந்த 3 இளைஞர்கள் 21 பேரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். வேடிக்கைக்காக இந்த கொலைகளை செய்ததாக அவர்கள் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த கொடூரக் கொலைகள் நடந்துள்ளன. அத்தனை பேரையும் சுத்தியலால் அடித்தே இந்த மூன்று பேரும் கொலை செய்துள்ளனர். உக்ரைனின் கிழக்கில் உள்ள நெப்ரோபெட்ரோவாஸ்க் நகரில்தான் ரத்தத்தை உறைய வைக்கும் இந்த கொலைகள் நடந்துள்ளன.
கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேருக்கும் 18 வயதுக்குள்தான். மூன்று பேரும் முன்னாள் பள்ளித் தோழர்கள்.
கொலையாளிகள் யார் என்பது முதலில் போலீஸாருக்குப் புரியவில்லை. கொலையாளிகள் எதற்காக இத்தனை பேரைக் கொன்றார்கள் என்பதும் தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சிலரின் செல்போன்களிலிருந்து கிடைத்த துப்பைக் கொண்டு மூன்று டீன் ஏஜ் கொலையாளிகளும் பிடிபட்டனர்.
போலீஸாரிடம் 3 பேரும் கொடுத்துள்ள வாக்குமூலம் குறித்து போலீஸ் அதிகாரி போட்கன் விலாசென்கோ கூறுகையில், வேடிக்கைகாக இந்தக் கொலைகளை செய்ததாக 3 பேரும் கூறியுள்ளனர். சுத்தியல் மற்றும் இரும்பு பைப்புகளைக் கொண்டு கொலைகளைச் செய்துள்ளனர். இப்படிச் செய்தால் பின்னாளில் வயதாகும்போது அதை நினைத்து திரில் அடையலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மூன்று பேருமே நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது தங்களது செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
யாரையும் குறி வைத்து அவர்கள் கொல்லவில்லை. தங்களிடம் சிக்கினால் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று கருதிய அப்பாவிகளை மட்டுமே கொன்றுள்ளனர் என்றார் அவர்.
ஜாலிக்காக 21 பேரைக் கொன்று குவித்த 3 இளைஞர்களும் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்.