மதுரையில் சித்திரை தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்
மதுரை: மதுரையில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயிலில் 12 நாள் சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இரவு பூப்பல்லக்கு வைபவம் நடந்தது. இன்று காலை தேரோட்டம் நடந்தது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், பிரியாவிடையும் அமர்ந்திருந்தனர். மீனாட்சி அம்மன் சிறிய தேரில் அமர் வைக்கப்பட்டார். பின்னர் வேத மந்திரம் முழங்க 6.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் ஜவஹர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் அரோகரா என்று கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் தேர் வடம் பிடித்தனர். கீழ வீதியில் தொடங்கி 4 மாசி வீதிகளில் தேரோட்டம் நிகழ்ந்தது. காலை 10.45 மணிக்கு தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
ஏராளமான பெண்களும் பக்தி பரவசத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி கோயிலை சுற்றி பக்தர்களுக்கு மோர் தானம் வழங்கபட்டது.