சுடுகாட்டில் தொங்கிய வாளியில் தலை - கோவையில் பரபரப்பு
கோவை: கோவையில், மாநகராட்சி சுடுகாட்டுக்கு அருகே தொங்க விடப்பட்டிருந்த வாளியில் துண்டிக்கப்பட்ட தலை இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, பி.என்.புதூர் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு பக்கத்தில் தூண் ஒன்றில் ஒரு பிளாஸ்டிக் வாளி தொங்கிக் கொண்டிருந்தது. வாளியின் மேல் பகுதி இறுக்க கட்டப்பட்டிருந்தது. அந்த வாளியின் வெளிப்பகுதியில் பி-2 காவல் நிலையத்தின் பெயர் மற்றும் குற்ற எண் ஆகியவை எழுதப்பட்டிருந்தது.
அந்த வாளியைப் பார்த்த பொதுமக்கள், யாரையோ கொலை செய்து தலையை துண்டித்து வாளியில் போட்டு விட்டுச் சென்றதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து வாளியைப் பார்த்தனர். பின்னர் பொதுமக்களை அமைதிப்படுத்தினர். இதனுள் தலைதான் உள்ளது. ஆனால் கொலை அல்ல. தற்கொலை செய்து கொண்ட ஒரு ஆணின் தலைதான் இது. பாதுகாப்பதற்காக இங்கு வைத்திருந்தோம் என்று விளக்கினர். இதையடுத்தே பொதுமக்களின் பீதி அகன்றது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ஏப்ரல் 14ம் தேதியன்று ப்ரூக் பான்ட் சாலையில், அடையாளம் தெரியாத ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பது தெரியவில்லை. கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இறந்த நபரின் அடையாளம் காண்பதற்காக தலையை மட்டும் தனியாக எடுத்து பாதுகாப்புக்காக இங்கு வைத்திருந்தோம். யாராவது காணாமல் போனதாக புகார் வந்தால் இந்த முகத்துடன், அவர்களின் படங்களை ஒப்பிட்டுப் பார்த்து அடையாளம் காணலாம் என்பதால் தலையை மட்டும் தனியாக எடுத்து பாதுகாத்து வந்தோம்.
இந்த வாளியில் இறந்தவரின் தலை உள்ளது என்பதை ஏற்கனவே சுடுகாட்டு பராமரிப்பாளரிடம் தெரிவித்திருந்தோம் என்று தெரிவித்தனர்.
ஆனால் மர்மமான முறையில் வாளி தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் கொலை செய்து தலையை மட்டும் விட்டு விட்டுப் போய் விட்டதாக பீதியடைந்து விட்டனர்.
இந்தத் தலையை சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி சூப்பர் இம்போஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் சி.கே.மாகாளி தெரிவித்துள்ளார்.