தர்மபுரி, கிருஷ்ணகிரியில் போலீசார் தீவிர நக்ஸல் வேட்டை
தர்மபுரி: கொடைக்கானலில் மாவோயிஸ்ட் நக்ஸலைட் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மறைந்திருந்த நவீன் பிரசாத் என்ற நக்ஸல் தீவிரவாதியை போலீசார் நேற்று சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் சில நக்ஸல்வாதிகள் தப்பியோடிவிட்டனர்.
அவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் சென்று பதுங்கியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1979, 80-களில் நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. நக்ஸலைட்டுகளை ஒடுக்க அப்போதைய டிஐஜி தேவாரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
1980ல் நக்ஸலைட்டுகளின் தலைவர் பாலன் உள்பட 35 தீவிரவாதிகள் போலீசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டனர்.
பாலனுக்குப் பிறகு ரவீந்திரன் தலைமையில் நக்ஸலைட்டுகள் செயல்பட்டு வந்தனர். அவரை கடந்த 2000ம் ஆண்டில் போலீசார் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து நக்ஸல் அமைப்புக்கு சிவா என்ற பார்த்திபன் தலைமையேற்றார்.
இந்நிலையில் ஊத்தங்கரையில் போலீசுக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் பார்த்திபன் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி ராமியனஹள்ளியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, அவரது காதலி சந்திரா மற்றும் மூக்கனேரியைச் சேர்ந்த நவீன் பிரசாத், காளிதாஸ் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் தப்பிஓடினர்.
இதில், தேனிமாவட்டம் பெரியகுளம் மலைப்பகுதியில் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்ட சுந்தரமூர்த்தியை திருப்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். நவீன் பிரசாத் நேற்று கொடைக்கானலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எனவே சந்திரா உள்ளிட்ட நக்ஸலைட்டுகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இந்நிலையில் தர்மபுரி அருகே உள்ள சொந்த ஊருக்கு நவீன் பிரசாத் உடல் இன்று கொண்டு செல்லப்படுகிறது. அவரது இறுதிச் சடங்கில் தலைமறைவான நக்ஸல்வாதிகள் கலந்துகொள்ளக்கூடும் என்று போலீஸ் கருதுகிறது.
நக்ஸல் நடமாட்டம் உள்ள பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தர்மபுரி எஸ்பி நஜ்மல் கோடா உத்தரவின்பேரில் ஒகேனக்கல் காட்டுப்பகுதியில் டிஎஸ்பி கிருஷ்ணன், செம்மனஹள்ளி கோம்பை பகுதியில் டிஎஸ்பி விஜயராகவன், தீர்த்தமலை வனப்பகுதியில் டிஎஸ்பி மோகன் தலைமையிலான தனிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர், ஒகேனக்கல் பகுதியில் முகாமிட்டுள்ள அதிரடிப்படை போலீசாரும் வனப்பகுதியில் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.