கோவில் விழாவில் ரகளை-அரசு மருத்துவமனை சூறை!
கரூர்: அரவாக்குறிச்சி அருகே நடைபெற்ற கோவில் விழாவில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அரசு மருத்துவமனை சூறையாடப்பட்டது.
அரவாக்குறிச்சி அருகே உள்ளது சீத்தப்பட்டி. இங்கு ஊர் மக்கள் சார்பில் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
இதே போன்று இந்த வருடமும் திருவிழா கொண்டாடப்பட்டது. அப்போது மாரியம்மனுக்கு புனித நீர் அமராவதி ஆற்றில் இருந்து எடுத்து வந்தனர்.
அப்போது பிரபு என்ற இளைஞர் தனது ஆதரவாளர்களுடன் ஆடி பாடி வந்துள்ளார். இதற்கு கோவில் நிர்வகி நவநீதன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த பிரபு, கிருஷ்ணமூரத்தி, ஜோதி, நவநீதன் ஆகியோர்க்கு படுகாயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்காக இவர்களை பள்ளபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு டாக்டர்கள் முதலில் யாருக்கு சிகிச்சை வேண்டும் என்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
எங்களுக்குத் தான் முதலில் சிகிச்சை தர வேண்டும் என்று கூறியபடி இந்தக் கும்பல் மருத்துவமனையில் இருந்த சேர், டேபிள், மருத்துவ உபகரணங்களை அடித்து உடைத்தது.
இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
தகவல் அறிந்த அரவாக்குறிச்சி போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பிரபு, கிருஷ்ணமூரத்தி, ஜோதி, நவநீதன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இவர்களை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இவர்களுக்கு சிகிச்சை ஒரு கேடா?