இந்தியா தடை-செளதியில் அரிசி விலை தாறுமாறாக உயர்வு
இந்தியாவில் உணவு தானியங்களின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எல்லா வகையான அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாசுமதி ரக அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் செளதி உள்ளிட்ட நாடுகளில் அரிசிக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இந் நிலையில் அராப் நியூஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,
110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அந் நாடு அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தியுள்ளது.
இந் நிலையில் செளதி அரிசி வர்த்தகர்களுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறையாக நிறைவேற்ற செளதி அரசு நேரடியாக தலையிட வேண்டும். இல்லாவிட்டால் செளதியில் பெரும் அரிசி பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
செளதியில் அரிசி விலை 3 மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அங்கு பணியாற்றும் ஆசிய நாட்டவர்கள் தான்.
இதற்கிடையே தங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்திய வர்த்தகர்கள் அரசியை முழு அளவில் ஏற்றுமதி செய்யாமல் இருந்து வருவதாகவும், அரசு இதில் தலையிட வேண்டும் என்றும் செளதி அரிசி வர்த்தகர்கள் அந் நாட்டு அரசிடம் கோரியுள்ளனர்.
மேலும் அரிசிக்கான விலையை உயர்த்தித் தரவும் தயாராக இருப்பதாக செளதி வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து இந்தியாவிடம் பேசப்படும் என அந் நாட்டு அமைச்சர் அலிரெசா தெரிவித்துள்ளார்.
ஆனாலும் உள் நாட்டிலும் கடும் பற்றாக்குறை நிலவுவதால் செளதிக்கு இந்தியாவால் எந்த அளவுக்கு உதவ முடியும் என்று தெரியவில்லை.
இந் நிலையில் வரும் மாதங்களில் அறுவடை தொடங்கவுள்ளதால் அரிசி பற்றாக்குறை ஓரளவுக்கு சரியாகும் என கருதப்படுகிறது. அதன் பின்னர் ஏற்றுமதியை இந்தியா அனுமதிக்கலாம் என கருதப்படுகிறது.
கடந்த 6 மாதங்களில் சர்வதேச அளவில் அரிசியின் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தாய்லாந்தைத் தவிர மற்ற ஆசிய நாடுகள் அனைத்தும் அரிசி ஏற்றுமதியை தடை செய்துவிட்டன.
உலகின் மிக ஏழ்மையான நாடான வியாட்நாமிலும் கூட அரிசி விலை கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.