சினிமா இயக்குநருக்கு அடி-கார் டிரைவருக்கு வெட்டு
பெரம்பலூர்: முயல் வேட்டை திருவிழா-வுக்கு சென்ற திரைப்பட இயக்குனர் தகராறில் சிக்கி அடி உதை வாங்கி மீண்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், அரணாரையை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் தமிழ் தேசம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங், மலையாளபட்டி, அரும்பாவூர் பகுதிகளில் நடந்து வருகிறது. படப்பிடிப்புக்காக தமிழ்செல்வன் மற்றும் படக் குழுவினர் பெரம்பலூரில் தங்கியுள்ளனர்.
இந்தநிலையில் பெரம்பலூர் அருகே ஆலம்பாடியில் முயல்வேட்டை திருவிழா நடந்தது. இரவில் கரகாட்டம் போன்ற பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதைக் காண அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து பொது மக்களும், இளைஞர்களும் திரண்டு வருவார்கள்.
முயல் வேட்டை விழா குறித்துக் கேள்விப்பட்ட தமிழ்செல்வன் தனது நண்பர்களோடு அங்கு சென்றார். அப்போது கூட்டத்தில் இருந்த வினோத் என்பவருக்கும், தமிழ்செல்வனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது பின்னர் அடிதடியில் முடிந்தது.
அப்போது இயக்குநரின் கார் டிரைவர் சிவபாலனை அக்கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆலம்பாடியை சேர்ந்த வினோத்திற்கும், டைரக்டர் தமிழ் செல்வனுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.