'அரசாங்கம்' கதை யாருடையது-விஜயகாந்துக்கு நோட்டீஸ்
சென்னை: விஜயகாந்த் நடித்துள்ள அரசாங்கம் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ராஜபாண்டியன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கு பதிலளிக்குமாறு விஜயகாந்த் மற்றும் படத்தின் தயாரிப்பாளரான அவரது மச்சான் சுதீஷ், இயக்குநர் மாதேஷ் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மே 10ம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விஜய்காந்த் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவரான ராஜபாண்டியன் தாக்கல் செய்துள்ள மனுவி்ல்,
சென்னை விருகம்பாக்கத்தில் தங்கியிருந்து டிரைவர் வேலைப் பார்த்து வரும் நான் அவ்வப்போது கதை, நாடகங்கள் எழுதி வருகிறேன். விஜயகாந்த் நடித்துள்ள அரசாங்கம் படத்தின் திரைக் கதையும், டைட்டிலும் என்னுடையது. எனவே இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
ராஜபாண்டியன் சார்பில் வழக்கறிஞர் ராமநாதன் ஆஜராகி, அரசாங்கம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு விஜயகாந்தின் தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
ராஜபாண்டியனின் கதைக்கும், அரசாங்கம்'படத்தின் கதைக்கும் எந்த தொடர்பு இல்லை, இரண்டு கதைகளும் ஒன்றாக உள்ளது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டப்படவில்லை. மேலும் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள படத்தை நிறுத்த முயற்சிப்பது ஒருவித விளம்பர உத்தி.
அரசியல் தூண்டுதல் காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இப் படத்தை நீதிபதி முன் திரையிட்டு காண்பிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் எக்காரணம் குறித்து இந்த படத்திற்கு இடைக்கால தடை விதிக்க கூடாது என்று விஜய்காந்தின் வழக்கறிஞர் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி படத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார்.
படத் தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ், இயக்குனர் மாதேஷ், தணிக்கை குழு அதிகாரி மற்றும் விஜயகாந்த் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து சுதீஷ் கூறுகையில்,
விஜயகாந்த் நடிக்கும் ஒவ்வொரு படத்துக்கும் இப்படிப்பட்ட எதிர்ப்புகள் வருவதும் பின்னர் தோற்றுப்போய் ஓடுவதும் வழக்கம்தான். அரசாங்கம் கதை இயக்குநர் மாதேஷினுடையது. மற்றவற்றை நாளை கோர்ட்டில் சொல்லப் போகிறோம். வழக்கு தொடர்ந்த நபர் நிச்சயம் இதற்காக வருத்தப்படப் போகிறார் என்றார்.