இந்தியாவுக்கு ஓடி வருகிறார் ஞானேந்திரா?
நேபாளத்தில் மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. மன்னருக்கான அனைத்து அதிகாரங்களையும் ஏற்கனவே பறித்து விட்ட நிலையில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்துள்ளது. எனவே ஞானேந்திராவுக்கான இறுதிக் கதவும் மூடப்பட்டு விட்டது.
பிரதமர் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படும் பிரசந்தா உள்ளிட்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் ஞானேந்திரா கெளரவமாக அரண்மனையை விட்டு வெளியேறி விட வேண்டும் என கெடு விதித்துள்ளனர்.
நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருவதால், விபரீத விளைவுகள் ஏற்படும் முன்பு நாட்டை விட்டே வெளியேறி விட ஞானேந்திரா தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அவர் இந்தியாவில்அடைக்கலம் புகலாம் எனத் தெரிகிறது.
ஞானேந்திராவின் மருமகள் ஹிமானி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். எனவே ஞானேந்திராவும் தனது குடும்பத்தினரோடு ராஜஸ்தானுக்கு செல்லக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் ஞானேந்திரா தரப்பிலிருந்து இதுவரை அரசியல் அடைக்கலம் கோரி எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் ஞானேந்திராவுக்கு இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் பொருத்தமாக இருக்காது அவர் இந்தியாவுக்குத்தான் புகலிடம் தேடி வருவார் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.