சில்லரை இல்லை என்றதால் கண்டக்டருக்கு மர்ம உறுப்பில் மிதி!
ஓட்டப்பிடாரம்: 500 ரூபாய்க்கு சில்லரை தர மறுத்த கண்டரக்டரை மர்ம உறுப்பில் தாக்கி மிதித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரது தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே உள்ள கல்லத்தி கிணறு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் தினேஷ். இருவரும் தூத்துக்குடி செல்லும் அரசு பஸ்சில் ஏறினர்.
ஓட்டநத்தத்துக்கு டிக்கெட் தரும்படி ரூ.500 கொடுத்தனர். டிக்கெட் கொடுத்த அவர் தற்போது சில்லரை இல்லை இறங்கும்போது தருகிறேன் என்று கண்டரக்டர் நாராயணன் கூறினார். ஆனால் தந்தை, மகன் இருவரும் உடனே சில்லரை தந்தால் என்ன, என்று கூறி கண்டக்டரை அடித்து உதைத்ததோடு அவரது மர்ம உறுப்பில் ஓங்கி மிதித்தனர்.
கண்டரக்டரின் அலறலை அடுத்து டிரைவர் முருகன் பஸ்சை நிறுத்தினார். பயணிகள் அவர்களை சூழ்ந்து கொண்டதால் திகைத்த ராஜ் கீழே குதித்து ஓடிவிட்டார். தினேஷ் தப்பிஓடிவிடாமல் பயணிகள் பிடித்து கொள்ள, டிரைவர் பஸ்சை மணியாச்சி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.
கண்டரக்டர் நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் தினேசை சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் கைது செய்தார். அவரது தந்தையை தேடி வருகிறார்.
தாக்குதலில் காயமடைந்த நாராயணன் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.