மதுரை தேவர் சிலைக்கு 24 மணி நேர பாதுகாப்பு: கருணாநிதி
சென்னை: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 24 மணி நேரப் பாதுகாப்பு அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று தேவர் சிலை அவமதிப்பு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அப்போது முதல்வர் கருணாநிதி பேசுகையில், தேவர் சிலைக்கு அருகே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். யாரும் சிலையின் அருகே செல்லாமல் தடுக்கப்படும்.
மதுரையில் நடந்த சம்பவம் வருத்தத்திற்குரியது. ஆனால் அந்த செயலை செய்தவர் ஒரு மன நிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.
மாநிலத்தின் பல பகுதிகளில் தேவர் பெருமகனாருக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சில விஷமிகள் சிலையின் மதிப்பை அறியாமல், தலைவர்களின் உயரிய தன்மைகளை அறியாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு விடுகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கும் பொருட்டு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேவர் பெருமகனார் எளிமைக்குப் பெயர் போனவர். தனது சொத்துக்களை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்தவர். தேவர் மீது அண்ணா, காமராஜர் ஆகியோர் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர் என்றார் கருணாநிதி.