செக் மோசடி செய்த தொழிலதிபருக்கு 8 ஆண்டு சிறை
கரூர்:செக் மோசடி செய்த வழக்கில் ஜவுளிக்கடை அதிபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். ஜவுளிக்கடை அதிபர். தொழிலை விரிவுபடுத்துவதற்காக மற்றொரு ஜவுளிக்கடை அதிபரான நாகராஜ் என்பவரிடம் கடந்த 2005ம் ஆண்டு ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். பின்னர் கடனை அடைப்பதற்காக ரூ.3 லட்சத்துக்கு நாகராஜிடம் செக் கொடுத்தார் சரவணன்.
ஆனால் அந்த கணக்கில் பணம் இல்லை என்று செக் திரும்ப அனுப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜ், சரவணனிடம் பணம் கேட்டார். ஆனால் சரவணன் அதை கண்டுகொள்ளாமல் தட்டிகழித்துள்ளார். இதையடுத்து செக் மோசடி செய்ததாக சரவணன் மீது நான்கு வழக்குகளை கரூர் நீதிமன்றத்தில் நாகராஜ் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பளித்தார். அதில் 4 வழக்குகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சரவணனுக்கு தலா 2 ஆண்டுகள் வீதம் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.