முத்துக்கருப்பனை அவமதித்த கேரள அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்
சின்னார் (கேரளா): தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழல் கண்காணிப்புப் பிரிவு ஐஜியும், முன்னாள் சென்னை நகர ஆணையாளருமான 'கருணாநிதி கைது புகழ்' முத்துக்கருப்பனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட கேரள அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக முத்துக்கருப்பன் தற்போது உள்ளார். தனது குடும்பத்தினரோடு கேரள மாநிலம் மறையூருக்கு அவ்வப்போது செல்வது வழக்கம். இதற்காக உடுமலைப்பேட்டை, சின்னார் வழியாக அவர் மறையூர் செல்வார்.
சமீபத்தில் மறையூர் சென்றார் முத்துக்கருப்பன். அப்போது கேரள எல்லையான சின்னாரில் கேரள விற்பனை வரித்துறைக்கு சொந்தமான செக் போஸ்ட்டில், நெடுங்கண்டம் விற்பனை வரித்துறை இன்ஸ்பெக்டர் சோமன் பணியில் இருந்துள்ளார்.
முத்துக்கருப்பன் காரை தடுத்து நிறுத்திய சோமன், குடிபோதையில் முத்துக்கருப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தகாத வார்த்தைகளைப் பேசி அவமரியாதையாக நடந்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்கருப்பன் கேரள மாநில காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து சோமன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.