சென்னை: ரூ.1,500 கோடியில் ஐடி பொருளாதார மண்டலம்
26.64 ஏக்கர் நிலப்பரப்பில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), கட்டுமானத் தொழிலில் முன்னோடி நிறுவனமான டி.எல்.எப். நிறுவனத்துடன் இணைந்து இந்த தகவல் தொழில்நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது.
இதற்கான ஒப்பந்தத்தில் டிட்கோ நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராமசுந்தரமும், டி.எல்.எப் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் கே.பி.சிங்கும் கையெழுத்திட்டனர்.
ரூ.1,500 கோடி முதலீட்டில் இந்த தகவல் தொழில்நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமையவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் மொத்தம் 45 லட்சம் சதுர அடி பரப்பில் அமையும். முதல் கட்ட கட்டுமானப் பணி 25 லட்சம் சதுர அடி பரப்பில் நிறைவேற்றப்பட்டு, 2009ம் ஆண்டில் முடிவடையும்.
மீதமுள்ள 20 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட 2ம் கட்ட கட்டுமானப் பணிகள் 2011ல் முடிவடையும்.
இந்தத் தகவல் தொழில் நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலம் 45,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பையும், 10,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பையும் உருவாக்கும்.