ஒரே ராக்கெட்டில் 10 'சாட்டிலைட்'களை ஏவுகிறது
சென்னை: ஒரே நேரத்தில் பத்து செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது. ஏப்ரல் 28ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இந்த சாதனையை இஸ்ரோ நிகழ்த்தவுள்ளது.
பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் மூலம் இந்த பத்து செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளன. பத்து செயற்கைக்கோள்களில், 8 வெளிநாடுகளைச் சேர்ந்த சிறிய ரக செயற்கைக் கோள்கள் ஆகும்.
பி.எஸ்.எல்.வி-சி9 ராக்கெட்டின் 12வது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விண்வெளி வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமான அளவில் செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட் மூலம் செலுத்துவது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் இஸ்ரோவின் சாதனை நிகழ்வாக இது கருதப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் பிஎஸ்எல்வி-சி7 ராக்கெட் மூலம் இந்தோனேசியாவின் லபான்-டப்சாட், அர்ஜென்டினாவின் பிஹன்சாட்-1, இந்தியாவின் கார்டோசாட்-2, எஸ்ஆர்இ1 உபகரணம் ஆகிய நான்கு செயற்கைக் கோள்கள் ஒரே நேரத்தில் செலுத்தி சாதனை நிகழ்த்தப்பட்டது. தற்போது அந்த சாதனையை முறியடித்து 10 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட் மூலம் இந்தியா செலுத்தவுள்ளது.
சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்திலிருந்து இந்த செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட உள்ளன.
எட்டு வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் தவிர, 690 கிலோ எடையுடைய இந்தியாவின் கார்டோசாட்-2ஏ, 83 கிலோ எடையுடைய இந்தியன் மினி சாட்டிலைட் (ஐஎம்எஸ்1) ஆகியவையும் செலுத்தப்படவுள்ளன.
கார்டோசாட் செயற்கைக்கோள் செயற்கைக்கோள் வரைபட பணிகளுக்காக அனுப்பப்படவுள்ளது. ஐஎம்எஸ்1 ரிமோட் சென்சிங் பணிகளுக்காக அனுப்பப்படுகிறது.
மற்ற எட்டு செயற்கைக் கோள்களும் மொத்தமாக 50 கிலோ எடை கொண்ட சிறிய ரக (நானோ) செயற்கைக் கோள்கள் ஆகும். இவை கனடா, ஹாலந்து, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவை ஆகும்.
இவற்றில் 6 செயற்கைக்கோள்கள் என்.எல்.எஸ்-4 என்ற கிளஸ்டராக பொருத்தப்பட்டு செலுத்தப்படுகிறது. டோரன்டோ பல்கலைக்கழகம், டென்மார்க், ஜெர்மனி மற்றும் ஹாலந்துக்குச் சொந்தமான செயற்கைக் கோள்கள் இவை. மற்ற இரண்டும் ஜப்பானைச் சேர்ந்தவை.
7வது செயற்கைக் கோள் என்.எல்.எஸ்-5 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது 16 கிலோ எடை கொண்டது. இதுவும் டோரன்டோ பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமானது. 8வது செயற்கைக் கோள் ரூபின்-8 ஆகும். இது ஜெர்மனியைச் சேர்ந்தது. இதன் எடை 7 கிலோ.
இந்த எட்டு வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் கல்வி தொடர்பான சோதனைக்காக அனுப்பப்படுகிறது. குறிப்பாக நானோ டெக்னாலஜியை செயற்கைக் கோள்களில் எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதை அறிய இந்த செயற்கைக் கோள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
28ம் தேதி காலை 9.23 மணிக்கு ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. கவுன்-டவுன் தொடங்குவது விரைவில் முடிவு செய்யப்படும்.
10 செயற்கைக் கோள்களையும் ஏவுவது வெற்றிகரமாக இருந்தால் இஸ்ரோ, வர்த்தக ரீதியில் பெரும் பலன் அடைய ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த 'லான்ஞ்சிங்' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.