கர்நாடகா தியேட்டர்களில் மீண்டும் தமிழ் படங்கள்!
பெங்களூர்: ஒகேனக்கல் குடிநீர்திட்ட பிரச்னை ஓய்ந்துள்ளநிலையில் கர்நாடகா தியேட்டர்களில் மீண்டும் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
ஒகேனக்கலில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றுவதற்கு கர்நாடக மாநில பாஜ மற்றும் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களில் தமிழ் திரைப்படங்களை திரையிட கன்னட ரக்ஷண வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் தமிழ்படங்கள் திரையிடப்படுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. ஒரு சில பகுதிகளை தவிர கேபிளில் தமிழ் டிவி சேனல் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டது.
இதனிடையே இந்த பிரச்னையை கண்டித்து நடிகர் ரஜினி கொடுத்த 'வாய்ஸ்' மற்றும் கர்நாடக தேர்தலை முன்னிட்டு ஒகேனக்கல் பிரச்னை ஒய்ந்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களில் மீண்டும் தமிழ் படங்களை திரையிடத் துவங்கியுள்ளனர்.
பெரிய விளம்பர பேனர்கள் மற்றும் பத்திரிகை, டிவி சேனல்களில் விளம்பரப்படுத்தாமல் சந்தடிசாக்கில் தமிழ்படங்களை பெங்களூர் தியேட்டர்கள் திரையிட்டுள்ளன. கன்னட ஆதரவு அமைப்புகளின் வெறுப்பை இதன்மூலம் சாமர்த்தியமாக தவிர்த்துள்ளனர்.
இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ள தடையை நீக்குமாறு கன்னட திரையுலகினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகாவில் தமிழ்படங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் திரையிடுவதற்கு உறுதியும் அளித்தனர்.
பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால் சிட்டியில் உள்ள 30க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ்படங்கள்தான் பெரும்பாலும் திரையிடப்படுகின்றன. கன்னட ரசிகர்களும் தமிழ்படங்களையே அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். கன்னட மொழியில் வெளியாகும் புதிய படங்களில் பெரும்பாலும் தமிழ்படங்களின் தழுவலாகவே இருக்கும். இதனால் பெங்களூர் நகர சினிமா ரசிகர்களை தமிழ்படங்கள்தான் நீண்டகாலமாவே தம்வசம் கட்டிப்போட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.