சிமெண்ட் ஆலைகளை அரசுடமையாக்க ராமதாஸ் கோரிக்கை
தஞ்சாவூர்: சிமெண்ட் ஆலைகள் கொள்ளை லாபம் அடிப்பதால் அனைத்து சிமெண்ட் ஆலைகளையும் அரசுடைமையாக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சிமெண்ட், இரும்பு உட்பட கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. இதை எதிர்கொள்ள வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் அவற்றை இறக்குமதி செய்ய வேண்டும்.
மாதம் 20 லட்சம் மூட்டையை ரூ.200க்கு விலைக்கு தருவதாக சிமெண்ட் ஆலையினர் அரசிடம் தெரிவித்தனர். அதன்படி கடந்த மூன்று மாதத்தில் 60 லட்சம் மூட்டை வழங்கி உள்ளார்களா? குறைந்த விலையில் எவ்வளவு மூட்டை விற்பனையானது என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
இந் நிலையில் சிமெண்ட் விலை மேலும் ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது.
இவர்கள் கொள்ளை லாபம் அடிப்பதை தடுக்க அனைத்து சிமெண்ட் ஆலைகளையும் அரசுடைமையாக்க வேண்டும். இது தொடர்பாக நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது முதல்வர் கருணாநிதியின் கருணை உள்ளத்தை காட்டுகிறது.
தமிழகத்தில், இரண்டு கோடி ரேஷன் கார்டுகளில் சுமார் 30 லட்சம் போலி கார்டுகள் உள்ளதாக எல்காட் நிறுவனத் தலைவர் உமாசங்கர் தெரிவித்துள்ளார். அதாவது 15 சதவீதம் காடுகள் போலியானவை.
பொது வினியோக திட்டத்துக்கு ஆண்டுக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி மானியம் தருகிறது. அதில் ரூ.150 கோடி வீணாகிறது.
வெளிச் சந்தையில் அரிசி விலை உயர்ந்துவிட்டதால் நடுத்தர மக்களும் வாங்கும் வகையிலான தரமான அரிசியை ரேஷனில் வழங்க வேண்டும் என்றார் ராமதாஸ்.