நேபாள மன்னரின் அதிகாரங்களைப் பறித்தது செல்லும்!
காத்மாண்டு: நேபாள மன்னர் வசம் இருந்த அனைத்து அதிகாரங்களையும் பறித்தது செல்லும் என்று நேபாள நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நேபாள நாட்டு மன்னர் வசம் இருந்த அனைத்து அதிகாரங்களையும் பறித்து, நேபாள நாட்டை மதச்சார்பற்ற நாடாக அறிவித்து கடந்த 2006ம் ஆண்டு மே 18ம் தேதி நேபாள நாட்டு நாடாளுமன்றம் பிரகடனம் செய்தது.
இதன் மூலம் மன்னராட்சி முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. நாட்டின் பிரதமருக்கும், நாடாளுமன்றத்திற்குமே முழு அதிகாரம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ராணுவமும், நாடாளுமன்றம் மற்றும் பிரதமரின் அதிகாரத்திற்குட்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து இரண்டு வக்கீல்கள் நேபாள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், 1990ம் ஆண்டு அரசியல் சாசனச் சட்டத்ைத நீக்கி விட்டுத்தான் 2007ம் ஆண்டு அரசியல் சாசனச் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே அந்த சாசனச் சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய கோர முடியாது என்று கூறி விட்டனர்.
இந்தத் தீர்ப்பின் மூலம் நேபாள மன்னரின் அதிகாரம் பறிக்கப்பட்டது சட்டப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.