இன்று முதல் மீண்டும் மக்கள் ஓசை வெளியாகிறது
மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழ் மக்கள் ஓசை. சமீபத்தில் இந்த நாளிதழின் உரிமத்தை புதுப்பிக்க அரசு மறுத்து விட்டது. விதிமுறைகளை மீறும் வகையில் மக்கள் ஓசை செயல்படுவதாக கூறி உரிமத்தைப் புதுப்பிக்க மலேசிய உள்துறை அமைச்சகம் மறுத்து விட்டது.
இதையடுத்து விதிமுறைகளுக்குப் புறம்பாக இனி நடக்க மாட்டோம் என மக்கள் ஓசை நிர்வாகம் அரசிடம் மன்னிப்பு கோரியது. இதையடுத்து மீண்டும் மக்கள் ஓசைக்கு உரிமம் வழங்கி அரசு உத்தரவிட்டது. வியாழக்கிழமை மக்கள் ஓசைக்கு உரிமம் புதுப்பிக்கப்பட்டது.
இதையடுத்து மக்கள் ஓசை ஊழியர்கள் தங்களது அலுவலகம் முன்பு திரண்டு உற்சாகமாக அதை வரவேற்றனர். இரு விரல்களைக் காட்டி வெற்றி என முழக்கமிட்டனர். மக்கள் ஓசை நாளிதழ் இன்று முதல் மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து செய்தித்தாளின் பொது மேலாளர் எஸ்.ஆர்.பெரியசாமி கூறுகையில், உரிமத்திற்கான கட்டணத்தை கட்டி விட்டோம். உரிமம் வழங்குவது தொடர்பான கடிதமும் உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்து விட்டது.
வம்சாவளி இந்தியர்களின் நலனுக்காக தொடர்ந்து மக்கள் ஓசை சேவையாற்றும். இன நல்லிணக்கத்தை மேம்படுத்த மக்கள் ஓசை பாலமாக விளங்கும் என்றார் பெரியசாமி.