பிரேதத்திற்கு வைத்த தீ பரவி முதியவர் பரிதாப சாவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே சுடுகாட்டில் பிரேதத்திற்கு வைத்த தீ பரவி, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி வள்ளியம்மை (40) உடல் நலம் பாதிக்கப்பட்டு சகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவரது உடலை கொளத்தூர் சுடுகாட்டில் தகனம் செய்ய எடுத்துச் சென்றனர்.
தகன மேடையில் உடல் வைக்கப்பட்டு அதன் மீது வரட்டிகள் அடுக்கி மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்தனர். அப்போது தீ திடீரென குபுகுபுவென கிளம்பி அருகில் இருந்தவர்கள் மீது பற்றிக் கொண்டது.
இதில், வள்ளியம்மையின் உறவினரும் கூலித் தொழிலாளியுமான ராமன் (65), அழகேசன் மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேர் மீதும் தீப்பிடித்துக் கொண்டது.
தீயில் கருகிய மூவரையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.