8 ஐஏஎஸ்கள் இடமாற்றம்-ஈரோட்டுக்கு புதிய கலெக்டர்
சென்னை: தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்ட கலெக்டராக மகேசன் காசிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி வெளியிட்டுள்ள உத்தரவில்,
1. மாநில திட்டக்குழு உறுப்பினர்-செயலாளராக டாக்டர் அனுராதா ராஜீவன் நியமிக்கப்பட்டுள்ளார். (இவர் நீண்ட விடுமுறையில் இருந்து வந்தார்). இதுவரை திட்டக்குழு உறுப்பினர்-செயலாளராக பணியாற்றி வந்த கிரிஜா வைத்தியநாதன் மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவ நல சிறப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் குழந்தை நலத்திட்ட இயக்குனர் பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார்.
2. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிர்வாக இயக்குனர் எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு, எரிசக்தித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இந்த பொறுப்பை எஸ்.ஆதிசேஷையா கூடுதலாக கவனித்து வந்தார்.
3. முதல்வர் அலுவலகத்தில் கண்காணிப்பு பிரிவு துணைச் செயலாளராக பணியாற்றி வரும் மகேசன் காசிராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு, ஈரோடு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஈரோடு கலெக்டர் பொறுப்பை, மாவட்ட வருவாய் அதிகாரி சி.மனோகரன் கூடுதலாக கவனித்து வந்தார்.
4. விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பும் ஐ.ஏ.எஸ். அதிகாரி தயானந்த் கட்டாரியா வேளாண்மைத்துறை சிறப்பு செயலாளர் மற்றும் வறட்சிக்கு இலக்காகும் பகுதி திட்ட கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்த பொறுப்பில் இருந்து வந்த பிரதீப் யாதவ் மத்திய அரசு பணிக்கு செல்கிறார்.
5. மாநில தேர்தல் ஆணைய செயலாளராக பணியாற்றி வரும் யு.சகாயம் மாற்றப்பட்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இந்த பணியில் இருந்து வந்த எஸ்.சந்திரமோகன் ஓய்வு பெற்றார்.
6. தமிழ்நாடு மாநில வாணிப கழக (டாஸ்மாக்) நிர்வாக இயக்குனர் மங்கட்ராம் சர்மா மாற்றப்பட்டுள்ளார். இவர் மத்திய வர்த்தகத்துறை இயக்குனர் பணிக்கு செல்வதால் செங்கல்பட்டு சப்-கலெக்டர் பி.சீதாராமன் டாஸ்மாக் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு திரிபாதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள மகேசன் காசிராஜனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மஞ்சள்நீர் காயல் கிராமம்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம், சென்னை லயோலா கல்லூரியில் எம்.காம். படித்தவர். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஐ.சி.டபிள்யூ. படித்தார். இதையடுத்து இந்தியன் வங்கி அதிகாரியாக பணிபுரிந்தார்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று துணை கலெக்டர் ஆனவர். திண்டுக்கல்லில் ஆர்.டி.ஓவாக பணியாற்றினார்.
1998ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை கவர்னரின் துணைச் செயலாளராக பணியாற்றினார். பின்னர் முதல்வர் அலுவலக கண்காணிப்பு பிரிவு துணைச் செயலாளராக பணியாற்றினார். கடந்த பிப்ரவரி மாதம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
மகேசன் காசிராஜனின் தந்தை எஸ்.டி.காசிராஜனும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் பச்சையப்பன் அறக்கட்டளை தலைவராகவும், தமிழ்நாடு தேர்வாணையத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.