எகிப்து, ஓமன், பஹ்ரைனில் கிளை திறக்கும் டிசிஎஸ்
துபாய்: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனம், எகிப்து, ஓமன், அபுதாபி ஆகிய நாடுகளில் தனது கிளைகளை திறக்கவுள்ளது.
இதுகுறித்து டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான எஸ்.ராமதுரை கூறுகையில், தற்போது துபாய், ரியாத், வட ஆப்பிரிக்கா, மொராக்கோ, பஹ்ரைன் ஆகிய பகுதிகளில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன. இப்பிராந்தியத்தில் கம்ப்யூட்டர் சேவை சந்தையின் மதிப்பு 50 மில்லியன் டாலர் ஆகும்.
டிசிஎஸ் குழுமத்தின் வளர்ச்சியில் இப்பிராந்தியத்தின் பங்கு மட்டும் 3 முதல் 5 சதவீதமாக உள்ளது. மொத்த இந்திய நிறுவனங்களின் பங்கு 11 சதவீதமாக உள்ளது.
இப்பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுளாக அடிப்படைக் கட்டமைப்பு, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. மேலும் பிரகாசமான வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
உலக அளவில் முதலிடத்தில் உள்ள 10 ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ்-ஸைக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறேன்.
டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் பெருமளவில் வெளிநாடுகளிலிருந்துதான் வருகிறது. எனவே டாலர் மதிப்பு குறைவால் நிறுவனத்திற்கு சற்று பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் 91 சதவீத விற்பனை வெளிநாடுகளில்தான் மேற்கொள்ளப்படுகிறது. அதில் அமெரிக்காவில் மட்டும் 50 சதவீத விற்பனை நடக்கிறது. எனவே டாலரின் வீழ்ச்சி எங்களுக்கு கவலை அளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. இருப்பினும் கடந்த 2 மாதங்களாக அதை சமாளித்து முன்னேறி வருகிறோம் என்றார் ராமதுரை.