எம்.பிக்கள் அமளி - சோம்நாத் கோபம்- டிவி 'லைவ்' கட்!
டெல்லி: எம்.பிக்கள் செய்த அமளியால் பெரும் கோபமடைந்த லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, லோக்சபா விளக்குகளை அணைக்க உத்தரவிட்டார். இதனால் டிவியில் எம்.பிக்களின் அமளியை நேரடியாக ஒளிபரப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
லோக்சபாவில் நேற்று கேள்விநேரத்தின்போது மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தனது குடும்பத்தினருக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக பிரமதர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி பாஜக, ஐக்கியஜனதாதளம் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அவர்களை அமருமாறு பலமுறை சோம்நாத் சாட்டர்ஜிகூறியும் அவர்கள் அடங்கவில்லை. இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. உறுப்பின்களின் போக்கால் கோபமடைந்த சோம்நாத் சாட்டர்ஜி, லோக்சபா விளக்குகளை அணைக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. சிறிய அளவிலான விளக்குகள் மட்டும் எரிந்தன. இதனால் அவையே இருளில் மூழ்கியது போல காணப்பட்டது. இதன் காரணமாக டிவி நேரடி ஒளிபரப்பு சில நிமிடம் பாதிக்கப்பட்டது.
பத்து நிமிடங்கள் கழித்து சோம்நாத் சாட்டர்ஜி பேசுகையில், உறுப்பினர்களின் போக்கு கண்டனத்துக்குரியது. இவர்கள் செய்யும் அமளிகளயெல்லாம் நாட்டு மக்கள் பார்த்தால் நாடாளுமன்றம் குறித்து தவறாக எண்ணுவார்கள். அதனால்தான் விளக்குகளை அணைக்கக் கூறினேன்.
நான் அவையை ஒத்திவைக்க மாட்டேன். சபாநாயகரின் பேச்சை மதிப்பதில்லை என்ற போக்கை சில உறுப்பினர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது வருத்தத்திற்குரியது என்றார்.