இலங்கையில் இந்திய அமைதிப் படை வீரர்களுக்கு நினைவிடம்
20 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அமைதி காக்கும் படை, இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் நிராகரித்து விட்டதால், அவர்களுக்கும், இந்தியப் படையினருக்கும் இடையே போர் மூண்டது. இதில் இந்தியப் படைக்கு கணிசமான பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்தியப் படையினர் திரும்பப் பெறப்பட்டனர். இந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படையினருக்கு இலங்கை நாடாளுமன்றம் அருகே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடம் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நினைவிடத்தில் இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த 1,500 வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்படவுள்ளன.
மே 22ம் தேதி இந்த நினைவிடம் திறந்து வைக்கப்படும். அல்லது கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் பங்கேற்க வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்த நினைவிடத்தைத் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1987ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்றது. அந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் இந்தியப் படையைச் சேர்ந்த 1,200 பேர் உயிரிழந்தனர். 2,800 பேர் படுகாயமடைந்தனர். பலருக்கு கை, கால் போன்ற உறுப்புகள் துண்டிக்கப்பட்டன. 1990ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் படை இலங்கையை விட்டு வெளியேறியது.
இந்திய அமைதி காக்கும் படையினருக்கான நினைவிடத்தில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது.