அதிமுகவுக்கு பாஜக கதவுகள் திறந்தே இருக்கின்றன-ராஜ்நாத்
சென்னை: பாஜக கூட்டணியில் சேர அதிமுக தயாராக இருந்தால் நாங்களும் தயார். எங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன என அக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அரிசி மற்றும் கோதுமையை தேவையான அளவு கையிருப்பில் வைத்திருந்தோம். இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படவில்லை. இப்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கும், பண வீக்கத்துக்கும், உணவு தானிய தட்டுப்பாட்டுக்கும் மத்திய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
விலைவாசி உயர்வு உலகளாவிய பிரச்சினை என்றும், மத்திய அரசு ஓரளவு கட்டுப்படுத்தி இருப்பதாக சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததாக நிதியமைட்டர் ப.சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விலையேற்ற சதவீதம் மிகவும் குறைவு. எனவே இந்த பொருளாதார நிபுணர்களின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நாங்கள் ஆட்சியில் இருந்தபோது என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடித்தோம் என்பதை பட்டியலிட்டு காட்டிஇருக்கிறோம்.
தற்போது பாஜக ஆளும் மாநிலங்களில் விலைவாசியை கட்டுப்படுத்த அந்தந்த மாநில முதல்வர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாஜக ஆட்சியில் ராஜீவ் கொலை தொடர்பாக முழு உண்மை அறிய பல்வேறு பிரிவினர் அடங்கிய குழு அமைத்தோம். அப்போது எங்கள் கூட்டணியில் திமுகவும் இருந்தது. இதனால் அந்த விசாரணை முறையாக நடக்கவில்லை என்று சோனியா காந்தி குறை கூறினார்.
இப்போது சோனியா முழு அதிகாரத்தில் இருக்கிறார். இதுவரை அந்த குழு பற்றி வாயே திறக்கவில்லை. அந்த குழுவின் விசாரணை முன்னேற்றம் பற்றி மத்திய அரசு விவரம் வெளியிட வேண்டும்.
சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக முதல்வருக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ராமர் பாலம் என்பது கோடிக்கணக்கான இந்துக்கள் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அதற்கு எந்த பாதிப்பும் வராமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பாஜகவும் முழு ஒத்துழைப்பு தரும்.
அமைச்சர் டி.ஆர். பாலு மீது எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பிரதமர் தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் பிரச்சினையில் கர்நாடகாவில் புதிய அரசு தேர்வு செய்யப்பட்டதும் சுமூகத் தீர்வு காண முடியும்.
பாஜக கூட்டணியில் சேர அதிமுக தயாராக இருந்தால் நாங்களும் தயார். எங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன.
இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றார்.
இதையடுத்து காரைக்குடியில் நடக்கும் விழாவில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார் ராஜ்நாத் சிங்.