எவரெஸ்ட்-அமெரிக்கரை திருப்பி அனுப்பிய நேபாளம்
காத்மாண்டு: திபெத் ஆதரவு பேனருடன் எவரெஸ்ட் சிகரம் ஏற வந்த அமெரிக்க மலையேற்ற வீரரை நேபாள அரசு திருப்பி அனுப்பியது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் வில்லியம் பிரான்ட் ஹாலன்ட். இவர் திபெத்தை விடுவிக்குமாறு கோரும் பேனருடன் கடந்த 21ம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமுக்கு வந்தார்.
இதையடுத்து அவரை எவரெஸ்ட் ஏற விடாமல் நேபாள நிர்வாகம் திருப்பி அனுப்பி விட்டது. மேலும் அவருக்கு 2 ஆண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் உள்பட நேபாளத்தில் உள்ள எந்த மலைச் சிகரத்திலும் அவர் ஏறக் கூடாது என நேபாளம் அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை வில்லியம் காத்மாண்டு வந்தபோது அவரை நேபாள நாட்டு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் அவரை விமான நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டனர்.
எவரெஸ்ட் முகாமில் 25 போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். திபெத்தியர்களுக்கு ஆதரவானவர்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.