முதல் முறையாக தமிழக ஐஜிக்கு பிரதமர் விருது
சென்னை: மக்களுடன் இணைந்து சமூக காவல் திட்டத்தை அறிமுகம் செய்ததற்காக தமிழக போலீஸ் ஐ.ஜி. திரிபாதிக்கு பிரதமர் விருது வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. திரிபாதி கடந்த 1999-2001ம் ஆண்டில் திருச்சியில் பணியாற்றினார். அப்போது குற்றங்களை கட்டுப்படுத்தவும், போலீஸ் சேவைகளை மேம்படுத்தவும், போலீசுடன் பொது மக்களும் பங்குபெறும் புதிய திட்டங்களை அமல்படுத்தினார்.
குடிசை பகுதிகளை தத்தெடுக்கும் திட்டம், பொது இடங்களில் புகார் பெட்டி திட்டம் ஆகிய திட்டங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை. இதற்கு சமூக காவல் திட்டம் என்று பெயரிடப்பட்டது.
இத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டதில் குற்றங்கள் அதிகளவில் குறைந்தது. போலீசுக்கும் பொது மக்களுக்கும் இடையிலான நட்பு வளரவும் வழி வகுத்தது.
இதை பாராட்டி வாஷிங்டனில் உள்ள சர்வதேச தலைமை காவல் அதிகாரிகள் சங்கத்தினரால் மக்கள் காவலுக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டது. பின்னர் ஆளுமையில் புதுமை முறைக்கான தங்கப் பதக்கம் என்ற விருதை இங்கிலாந்து கிளாஸ்கோ நகரில் உள்ள பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மைகளுக்காக காமன்வெல்த் சங்கம் அளித்தது.
இந் நிலையில் இப்போது பிரதமரின் பொது நிர்வாகத்தில் தலைசிறந்த பணிகளுக்கான விருது ஐஜி திரிபாதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பதக்கமும், ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 21ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இதை வழங்கினார். நாட்டில் முதல் முறையாக இந்த விருது ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.