பாலிடெக்னிக்குகளில் சேர மே 5 முதல் விண்ணப்பம்
சென்னை: தமிழகத்தில் பாலிடெக்னிக்குகளில் இந்த ஆண்டு கூடுதலாக 10,000 இடங்கள் வரை சேர்க்கப்படவுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் 3 ஆண்டுகள் பயில வேண்டும். பிளஸ் டூ முடித்தவர்கள் 2 வருடம் படித்தால் போதும் ('லேட்டரல் எண்டிரி').
பிளஸ் டூ மாணவர்கள் சேர்க்கைக்கு பாலிடெக்னிக்குகளில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் 22 அரசு பாலிடெக்னிக்குகளும், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளும், 205 சுயநிதி பாலிடெக்னிக்குகளும் உள்ளன.
அரசு பாலிடெக்னிக்குகளில் 5,160 இடங்களும், அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளில் 12,980 இடங்களும், சுயநிதி பாலிடெக்னிக்குகளில் 69,316 இடங்களும் உள்ளன.
இந் நிலையில் இந்த ஆண்டு புதிதாக 50 பாலிடெக்னிக்குகள் தொடங்க அனுமதி தரப்படலாம் எனத் தெரிகிறது. அப்படிப்பட்ட நிலையில் மேலும் 10,000 இடங்கள் உருவாகவுள்ள.
இந் நிலையில் பிளஸ் டூ முடித்துவிட்டு பாலிடெக்னிக்குகளில் 2வது ஆண்டு சேரும் மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் அனைத்து அரசு பாலிடெக்னிக்குகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன.
விண்ணப்பக் கட்டணம் ரூ.150. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கட்டணம் இல்லை.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். www.tndte.com என்ற இணையதளத்திலும் பெறலாம்.
இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறுபவர்கள் ரூ.150க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் மே 21ம் தேதி.
10ம் வகுப்பு மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் சேருவதற்கான விண்ணப்பம் செய்வது குறித்த விவரங்களை அரசு விரைவில் வெளியிடும்.