போதை பொருள் கடத்தல்-சீனாவில் 2 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த சுல்தானின் மகன் சலீம்கான் ( 28) கடந்த 1998ம் ஆண்டு வைரம் தரம் பிரிக்கும் வேலைக்காக பாங்காக் சென்றார்.
2004ம் ஆண்டு சொந்த ஊர் திரும்பிய இவருக்கு திருமணம் நடந்தது. அந்த திருமணம் தொடர்பாக சலீம் கானுக்கும், தந்தை சுல்தானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து சலீம்கான் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு மீண்டும் வெளிநாடு சென்றார். ஆனால், அவர் எங்கு சென்றார் என்பது தெரியாமல் இருந்தது.
இந் நிலையில் சலீம் கான் சீனாவில் போதை மருந்து கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக சுல்தானுக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது. சலீமுடன் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தை சேர்ந்த அஸ்கர் என்பவரும் சிக்கியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தியதாக இருவருக்கும் சீன அரசு தூக்கு தண்டனை விதித்துள்ளது.
இந் நிலையில் சில நாட்களுக்கு அஸ்கரின் சகோதரர் சையத் மற்றும் அவரது உறவினர்கள் சுல்தானை சந்தித்து, அஸ்கர் தூக்கு தண்டனை பெற்றதற்கு உங்கள் மகன்தான் காரணம். இதனால் ரூ. 3 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று சுல்தானை மிரட்டியதாகத் தெரிகிறது.
இதையடுத்து சுல்தான் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சஞ்சீவ்குமாரிடம் புகார் தந்தார். பேக்ஸ் மூலம் தரப்பட்ட அந்த புகாரில்,
சீனா நாட்டு சிறையில் மரண தண்டனை கைதியாக உள்ள 2 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகனை காரணம் காட்டி, சையது மற்றும் அவரது உறவினர்கள் சிலர் என்னிடம் பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து விசாரிக்க ஐஜி உத்தரவிட்டுள்ளார்.